கனடாவில் புதிய வகை போதைப் பொருள் குறித்து எச்சரிக்கை
கனடாவின் டொராண்டோ நகரில் செயல்படும் போதைப் பொருள் பரிசோதனை அமைப்பு, கட்டுப்பாடற்ற பென்டனைல் போதைப் பொருள் விநியோகத்தில் புதிய வகை ஒரு மருந்துப் பொருள் கண்டறியப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
“Nefopam” என அழைக்கப்படும் இந்தப் பொருள், பீட்டர்ப்ரோ மற்றும் கிங்ஸ்டன் பகுதிகளிலும் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 12 ஆம் திகதி டொராண்டோ மற்றும் பீட்டர்ப்ரோ நகரங்களில் சேகரிக்கப்பட்ட பென்டனைல் மாதிரிகளில் இது முதன்முதலாக கண்டறியப்பட்டது.

மார்ச் 12 முதல் 25 வரை பரிசோதிக்கப்பட்ட 102 பென்டனைல் மாதிரிகளில் 12 மாதிரிகளில் nefopam இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்டாரியோ போதைப் பொருள் பரிசோதனை அமைப்பு தெரிவித்துள்ளது.
Nefopam என்பது பொதுவாக மிதமானது முதல் கடுமையான வலிகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு வலி நிவாரணியாகும். இது Acupan என்ற பெயரில் சில நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் வலிகளை குறைக்க பயன்படுத்தப்படுகிறது.
இந்த மருந்து எவ்வாறு வலியை குறைக்கிறது என்பது முழுமையாக புரிந்துகொள்ளப்படாததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது மூளைக்கு செல்லும் வலி சிக்னல்களை தடுக்கலாம் அல்லது மூளை அந்த வலி சிக்னல்களை உணராமல் செய்யலாம் என நம்பப்படுகிறது. Nefopam தற்போது கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளில் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.