ஸ்பெயின் துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட சொகுசு கப்பல் ; வைரஸ் தொற்றால் மூவர் உயிரிழப்பு
ஆர்ஜென்டினாவில் இருந்து ஸ்பெயினுக்கு 147 பயணிகளுடன் பயணித்த எம்வி ஹோண்டியஸ் சொகுசு கப்பலில், மரணத்தை ஏற்படுத்தக் கூடிய ஹன்டா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
கப்பலில் இருந்த பயணிகளில் சிலருக்கு தொற்று ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அதில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் கடுமையான உடல்நிலை பாதிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மூவருக்கு லேசான அறிகுறிகள் காணப்பட்டதாகவும் WHO கூறியுள்ளது. இந்த நிலையில், கப்பல் ஸ்பெயினை அடைந்த பின்னர் கேனரி தீவுகளில் உள்ள கிரனாடில்லா துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
ஹன்டா வைரஸ் குறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன், இந்தத் தொற்று COVID-19 போல விரைவாக பரவாது என்றும், நீண்ட நேரம் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கே பரவ வாய்ப்பு உள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.
தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, கப்பலில் பயணித்தவர்களுக்கு மேலதிக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.