டிரம்ப் வேண்டுகோள் ஏற்பு ; சீன சிறையிலிருந்து அமெரிக்க பாதிரியார் விடுவிப்பு
சீனாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க பாதிரியார் எஸ்ரா ஜின் மிங்ரி விடுதலை செய்யப்பட்டு அமெரிக்கா திரும்பியுள்ளதாக அவரது குடும்பத்தினரும் வழக்குரைஞர்களும் தெரிவித்துள்ளனர்.
சீன அரசின் கட்டுப்பாடுகளை மீறி இணைய வழி மத ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியதாகக் குற்றம் சாட்டி, சீயோன் தேவாலயத்தைச் சேர்ந்த எஸ்ரா ஜின் மற்றும் மேலும் 17 பேரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சீன அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.
இதனையடுத்து, கடந்த மே மாதம் சீனாவிற்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

அந்தச் சந்திப்பில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த எஸ்ரா ஜின் மற்றும் ஹாங்காங் சமூகச் செயற்பாட்டாளர் ஜிம்மி லாய் ஆகியோரை விடுதலை செய்யுமாறு ஷி ஜின்பிங்கிடம் வலியுறுத்தியதாக டிரம்ப் பின்னர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், எஸ்ரா ஜின் விடுதலை செய்யப்பட்டு அமெரிக்கா திரும்பியுள்ளதாக அவரது குடும்பத்தினரும் சட்டத்தரணிகளும் வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், அவரது விடுதலைக்காக நடவடிக்கை எடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், எஸ்ரா ஜின்னுடன் கைது செய்யப்பட்ட மற்றைய 17 பேரும், ஹாங்காங் சமூகச் செயற்பாட்டாளர் ஜிம்மி லாயும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.