பிரிட்டனில் வரலாறு காணாத வறட்சி ; நீர் சேமிப்புக்கு அரசு புதிய ஆலோசனைகள்
பிரிட்டனில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, நீரை சேமிக்கும் வகையில் அரிசி கழுவுவதை குறைப்பது உட்பட பல ஆலோசனைகளை அரசு வழங்கியுள்ளது.
ஐரோப்பாவில் ஏற்பட்ட கடும் வெப்ப அலை காரணமாக, பிரிட்டனில் நீர்நிலைகள் வறண்டு பெரும்பாலான பகுதிகள் தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ளன.
இதனால், அங்கு நீரை சேமிக்க பொதுமக்களுக்கு புதிய விழிப்புணர்வு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் அரிசி கழுவுவதை குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆசிய சமூகத்தினர் பிரிட்டனில் அதிகளவில் வசித்து வரும் நிலையில், அவர்கள் சமைப்பதற்கு முன், அரிசியை 5 - 7 முறை கழுவும் பழக்கத்தை கொண்டுள்ளதால், இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக, மலேஷியாவைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞர் பிங் கூம்ப்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
அரிசியை இரண்டு முறை மட்டும் கழுவினால் போதுமானது என்றும், இதன் மூலம் ஒவ்வொரு முறையும் 5 லிட்டர் தண்ணீரை மிச்சப்படுத்தலாம் என்றும், 'வீடியோ' மூலம் பிங் கூம்ப்ட்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
அரிசி கழுவிய நீரை செடிகளுக்கு ஊற்றலாம் என்றும், அழகு சாதனப் பொருளாக முகத்திற்கும், தலைமுடிக்கு ஸ்பிரே செய்ய பயன்படுத்தலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று, முஸ்லிம்கள் தொழுகைக்கு முன்னர் செய்யும் துாய்மை சடங்கான 'உது'விற்கு, 6 - 12 லிட்டர் வரை தண்ணீர் செலவாவதாகவும், குறைந்த தண்ணீரை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த விழிப்புணர்வு பிரசாரங்களுக்கு, பிரிட்டன் அரசு அமைப்பான 'ஆப்வாட்' மூலம், 3.5 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள குழாய்களில் ஏற்படும் கசிவுகள் மூலமாகவே தினமும், 300 கோடி லிட்டர் தண்ணீர் வீணாகி வரும் நிலையில், பொதுமக்களுக்கு மட்டும் அறிவுரை வழங்குவது நியாயமா என்ற கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.